காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தற்காலிக நீக்கம்

தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளராகவும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரூபி மனோகரன். கடந்த வாரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி உத்தரவிட்டு இருந்தனர். இன்று காலையில் கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் ரஞ்சன் குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. அவர் 15 நாள் அவகாசம் கேட்டு இருந்தார்.
இதையடுத்து ரூபி மனோகரனை கட்சி பொருளாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.
ரூபி மனோகரன் சொல்லும் காரணம் ஏற்புடையது அல்ல. அடுத்த கூட்டத்தில் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
63 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கபட்ட ரூபி மனோகரன் கூறியதாவது:- நான் 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களையும் சேர்த்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.
செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்ற தொகுதியில் எனக்கு பல வேலைகள் உள்ளன. அதனால் தான் இன்று ஆஜராகவில்லை. எனது விளக்கத்தை கேட்ட பின்னர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
ரூபி மனோகரன் நீக்கத்துக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி.கண்டனம் தெரிவித்து உள்ளார்,. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கட்சியின் பொருளாளர், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் என்ற செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.அவர் தரப்பு நியாயத்தை கேட்காமல் ஒரு எம்.எல்.ஏ.வை கட்சியிலிருந்து நீக்கியது தவறான முடிவு. இதை நான் கண்டிக்கிறேன்
இவ்வாறு கார்த்திக் சிதம்பரம் கூறி இருக்கிறார்.
