நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை; தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு வக்கீல்களுடனான மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகள் நடமாட்டத்தை அடியோடு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கூட்டத்தில் அரசு வக்கீல்கள், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் கமலவாசன், தூத்துக்குடி மாவட்ட தடயஅறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் கலாலட்சுமி, சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ், ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ், ஆவுடையப்பன், மாயவன், லோகேசுவரன், வெங்கடேஷ், அருள், பொன்னரசு, சிவசுப்பு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
