தூத்துக்குடியில் புத்தக திருவிழா தொடக்கம்; 29-ந் தேதி வரை நடக்கிறது

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-ம் புத்தக் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த புத்தக திருவிழா தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் இன்று தொடங்கியது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புத்தக திருவிழாவை திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர், பின்னர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாக சிறப்பு அரங்குகளும் அமைந்துள்ளன.
புத்தக திருவிழாவை முன்னிட்டு 3000 இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியினை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் திருமண மண்டபம் மேல் தளத்தில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த விழா மேடையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
புத்தக திருவிழாவில் தினமும் கலைத்திறன் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சியோடு புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். புத்தகம் வாங்கி செல்லக்கூடிய நபர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் , 2-ம்பரிசாக ரூ.50000, 3-வது பரிசாக ரூ. 25000 வழங்கப்பட இருக்கிறது.
புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கவுரவ் குமார், வட்டாட்சியர் செல்வக்குமார், வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி வன அலுவலர் அபிஷேக் டோமர், செய்தி, மக்கள் தொடர்பு துறை அலுவலர் நவீன் பாண்டியன், பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், மற்றும் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
