தூத்துக்குடிக்கு புதிய விரைவு ரெயில்கள்; தென்னக ரெயில்வே மேலாளரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

சென்னையில், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை கனிமொழி எம்.பி. சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள ரெயில்வே திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
சென்னை – தூத்துக்குடி இடையே ஒரே ஒரு விரைவு ரெயில் (முத்து நகர் எக்ஸ்பிரஸ்) மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை-தூத்துக்குடி இடையே தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக புதிய விரைவு ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
திருநெல்வேலி- தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரெயிலின் பயண நேரத்தை தற்போதைய 3 மணி நேரத்திலிருந்து 1:30 மணி நேரமாக குறைத்தால், மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கும்.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ஆழ்வார்திருநகரியில் நின்று சென்றால் சென்னைக்கு செல்லும் மற்றும் திரும்பும் பயணிகளுக்கு உதவும். காயல்பட்டினம், குரும்பூர், நாசரேத் ரெயில் நிலையங்களில் நடை மேடையை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் விரைவு ரெயில்களை இணைக்கும் வகையில் ரெயில்களை இயக்க வேண்டும்.
தூத்துக்குடி- கோயம்புத்தூர் புதிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
