நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் அணிக்கு வரலாம்; டி,ஜெயக்குமார் பேட்டி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள், ஏன் இப்போது தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்களுடன் வரலாம்.
இப்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள உள்ளவார்கள், அவர்களுடன் ஒன்றுமையாக உள்ளனரா என்றால் கிடையாது. அவர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் இருந்துள்ளார். சசிகலா குடும்பத்தை எதிர்த்து அவர் தர்மயுத்தம் நடத்தினார். பிறகு அதே குடும்பத்தை போய் பார்க்கிறார்.
99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த போது ஒரு சதவீத ஆதரவு கூட இல்லாத ஒ.பி.எஸ்., எப்படி பொதுக்குழுவை கூட்டமுடியும்.
ஒ.பி.எஸ்.கூட்டுவது பொதுக்குழு அல்ல. அது ஒரு பொய்க்குழு. அவர் நடத்துவது கட்சி அல்ல. அது ஒரு நிறுவனம்.
தமிழகத்தில் விஞ்ஞானபூர்வ மாக ஊழல் செய்த ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி. இவர்களது நிறுவனமான ரெட் ஜெயண்டை மீறி எந்த திரைப்படமும் திரையிட முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
எந்த திட்டத்தையும் தி.மு.க.வினர் ஆதாயம் இல்லாமல் செய்யமாட்டார்கள். தற்போது சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரிசனின் புதிய கேபிள் நிறுவனத்தையும் வளர்க்கத்தான் அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார் .
