கங்கைகொண்டானில் உணவு பூங்கா விரைவில் அமையும்;அதிகாரி தகவல்

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உணவு பூங்கா அமைப்பது தொடர்பாக முதலீட்டாளர்களுடனான 4-வது ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் மதுமதி தலைமை தாங்கினார். மாநில வேளாண்மை விற்பனை வாரிய தலைமை செயல் அலுவலர் நடராஜன், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேளாண்மை இயக்குனர் மதுமதி கூறியதாவது:- மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘பிரதான் மந்திரி காசான் சம்படா யோஜனா’ திட்டத்தின் நிதி உதவியுடன் கங்கைகொண்டான் சிப்காட் வணிக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் உணவு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ரூ.77 கோடி செலவில் செயல்படுத்துவதற்காக நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டு திட்ட செயலாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த உணவு பூங்காவில் தற்போது அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர் வசதி, மின் இணைப்பு, சுற்றுச்சுவர், கழிவுநீர் கால்வாய், எடை மேடை போன்ற வசதிகளும், பொது உள்கட்டமைப்பு வசதிகளான சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் வசதி, பரிசோதனை ஆய்வகம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சிப்காட் அல்லது சிட்கோ கொள்கையின்படி நிலம், தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், கடனுக்கு 3 சதவீதம் வட்டி விலக்கு, சிறப்பு மானியம், முத்திரை கட்டண விலக்கு, தொழில்நுட்ப உதவிகள், தர பரிசோதனை ஆய்வகங்கள் உள்பட பல்வேறு வசதிகளை முதலீட்டாளர்கள் பெறலாம். விரைவில் செயல்பாட்டுக்கு வரும் இங்கு உணவு பூங்கா தொடங்க முன்வந்துள்ள தொழில் அதிபர்களின் ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, வருகிற 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் உணவு பூங்கா செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினர். கூட்டத்தில் பயிற்சி உதவி கலெக்டர் கோகுல், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பூவண்ணன், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய துணை இயக்குனர் பூவராகவன், நபார்டு ஜெயக்கண்ணன், செயற்பொறியாளர் மகேஷ் நாகராஜன், முதலீட்டாளர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
