சென்னையில் மழைக்கு பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கினார் டி.ஜெயக்குமார்

சென்னை புளியந்தோப்பில் மழையால் வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் சைக்கிள் ரிக்சா தொழிலாளியின் மனைவி பலியானார்.
இந்த பகுதியை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று ( 2/11/22) பார்வையிட்டு இறந்து போன பெண்ணின் கணவருக்கு ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டி,ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நேற்று இரவு 7.15 மணியளவில் இந்த துயர இந்த சம்பவம் நடைபெற்றது. அதன் பின்பு ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை. சுமார் 9.15 மணிக்கு தனியார் ஆம்புலன்ஸ்தான் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் நடைபெற்ற உடனே ஆம்புலன்ஸ் வந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.
இந்த சம்பவம் மூலம் மருத்துவ துறை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. உயிரிழந்தவர் மீது மிகப்பெரிய கல் விழுந்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் வரவில்லை.

மேலும் நேற்றைய தினம் மேயர் இங்குள்ள பக்கத்து தெருவுக்கு வந்தார். ஆனால் இங்கு வரவில்லை. அதே போல் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேற்று இங்கு வரவில்லை. இன்றைக்கு நாங்கள் வந்திருக்கிறோம் என்ற தகவல் தெரிந்ததும் ஓடோடி வந்துள்ளார். ஏன் நேற்றே அவர் வந்திருக்க வேண்டியதுதானே? அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூறியதோடு அனைத்து உதவிகளை அ.தி.மு.க.வினர்தான் செய்து வருகின்றனர். தற்போது ரூ.25000 நிதியுதவியும் அளித்துள்ளோம்.
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளாரே?
பதில்:- 4500 கோடி ரூபாய் மூலம் திட்டம் நடைபெறுவதாக அமைச்சர் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தை கொண்டுவந்தது எங்களது ஆட்சியில்தான். ஜப்பான் மற்றும் ஜெர்மன் நாட்டிலிருந்து நிதி பெற்று இந்த திட்டத்தின் பணிகள் நடைபெறுகிறது. தி.மு.க. அரசு வந்துதானா இந்த திட்டத்தை தொடங்கினார்கள்? இந்த திட்டத்தின் முதல் தொகுப்பினை நாங்கள்தான் தொடங்கினோம். தற்போது 2 கட்ட பணிகள் நடைபெறுகிறது. இந்த 2 கட்டம் பணிகள் நடைபெறுவதற்கு காரணமே நாங்கள். முதல் கட்டப்பணிகள் இல்லாமல் இரண்டாம் கட்டப்பணிகள் நடைபெறுமா?
கேள்வி:- இந்த மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து?
பதில்:- இவங்க எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக எடுக்கவில்லை. உதாரணத்திற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒரு போன் செய்து ஏதோ ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். நிச்சயமாக தொலைபேசியை எடுக்கவே மாட்டாங்க. அதே போல் யாரும் வரவும் மாட்டார்கள். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை அகற்றுவதற்கு தேவையான இயந்திரத்தை கொண்டுவந்து எங்கையாவது அவற்றுவதை பார்க்க முடியுதா? நிச்சயமாக இல்லவே இல்லை. இன்னும் 6 நாளைக்கு மழை இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
கேள்வி:- அ.தி.மு.க.வுடனான உறவு அண்ணன் தம்பி உறவு என்கிறார்களே?
பதில்:- அந்த அண்ணன் தம்பி உறவெல்லாவம் 1972ஆம் ஆண்டிலே முடிந்துவிட்டது. எங்களை பொறுத்தவரை தி.மு.க.தான் எதிரி. அவங்க யாரு எங்க கட்சியிலே மூக்கை நுழைப்பது? பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. உறவு தேர்தல் நேரத்தோடு சரி. பா.ஜ.க. எங்களை இயக்குகிறது என்பது தவறு. அவங்களும் அதை செய்யவும் மாட்டார்கள். மிகப்பெரிய இயக்கம் அ.தி.மு.க., எங்களைப்பொறுத்தவரை நாங்கள் பிரதான எதிர்கட்சியாக இருக்கிறோம். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் இயக்கம் எதுவென்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். இன்றைக்கு நேரு சொல்கிறார் “ஸ்டாலின் தூங்காமல் இருக்கிறாராம். இதற்கு காரணமே அவங்க கட்சிக்காரங்கதான்” மேலும் அரசு இயந்திரத்தை சரியாக பயன்படுத்த தெரியாத அரசாங்கமாகத்தான் இந்த அரசாங்கம் இருக்கிறது. பத்திரிகையாளர்களை மிரட்டுகிற அரசாங்கமாகத்தான் இந்த அரசு இருக்கிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
