தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரை அகற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் நேற்று இரவு பெய்த கனமழையால் டூவிபுரம், பண்டுகரை சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல் திருச்செந்தூர், சாயர்புரம் உட்பட மாவட்டத்தின் பல பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 66.4 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 64 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 59 மில்லிமீட்டரும், கடம்பூரில் 56 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 55 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் தூத்துக்குடி-18.4 மில்லி மீட்டரும் மழை பதிவானது. ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் இதுவரை பெய்யாத அளவிற்கு நேற்று பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து துறை அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
