கோவில்பட்டியில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்ற ஓட்டல்; மக்கள் குவிந்தனர்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் பைபாஸ் ரோடு பாலத்தின் பக்கவாட்டில் சாத்தூர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் புதிதாக இன்று அமுதம் சைவம் மற்றும் அசைவ உணவகம் திறக்கப்பட்டது. தென் இந்திய பாரம்பரிய மண்பானை மற்றும் வடஇந்திய உணவு வகைகள் இங்கு பரிமாறப்படுகின்றன.
ஓட்டல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் தால்சா ஆகியவை வெறும் 10 ரூபாய்க்கு பார்சல் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து 11.30 மணிக்கே கூட்டம் வரத்தொடங்கி விட்டது. கடைக்கு முன்புறம் ஏராளமான பேர் வரிசையில் காத்து நின்றனர். நீண்ட தூரத்துக்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
5 அண்டாக்களில் பிரியாணி தயார் செய்து பகல் 12 மணிக்கு ரூ.10 விலையில் பார்சல் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் பிரியாணியை வாங்கி சென்றனர். நாளை முதல் வழக்கமான முறையில் ஓட்டல் செயல்பட தொடங்கும் என்று ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
