“நம்ம கோவில்பட்டி” செல்பி ஸ்பாட்

சென்னை கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் உள்ளது போல கோவில்பட்டியில் ‘நம்ம கோவில்பட்டி” என்ற செல்பி ஸ்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இது நகராட்சி சார்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பிலோ அமைக்கப்படவில்லை. அதுவும் கோவில்பட்டி நகரின் மையபகுதியிலோ அல்லது நகரின் நுழைவு பகுதியிலோ இல்லை.
கோவில்பட்டி புறநகர் பகுதியான சுபாநகரில் K.R.A.மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிக்கூடத்தின் சார்பில்” நம்ம கோவில்பட்டி” செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு இருக்கிறது, பள்ளிக்கூடத்தின் முன்பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த செல்பி ஸ்பாட்டை கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தீபாவளியன்று காலை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் அதன் முன்பு நின்றபடி செல்பி எடுத்துகொண்டார்.
தற்போது இந்த செல்பி ஸ்பாட் பொதுமக்களை அதிகம் கவர்ந்து வருகிறது. வேகமாக பிரபலம் அடைந்து வரும் இந்த செல்பி ஸ்பாட் இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதன் முன்பு நின்று புகைப்படம் எடுக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். கோவில்பட்டி நகர்ப்பகுதியில் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.

இந்த “நம்ம கோவில்பட்டி” செல்பி ஸ்பாட்டை அமைத்துள்ள பள்ளி நிர்வாகத்தினர் இது பற்றி கூறியதாவது:-
கோவில்பட்டியில் வசிக்கும் ஒவ்வொரு மாணவரும் நம் நகரின் பாரம்பரியத்தை பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டிய நேரம் இது.
நம் நகரின் கோவில்கள், உலகப்புகழ் பெற்ற கடலைமிட்டாய்,
இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் ஆக்கி விளையாட்டு திறமைகள்,
நவீன விவசாயத்திற்கு வழிகாட்டியாய் அமைந்த பழமையான வேளாண் மையம்,
சாகித்ய அக்கடமி விருதுகளை குவித்த நமது கரிசல் இலக்கியவாதிகள்….
இப்படி நகரின் பெருமைகளை இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ளும வகையிலான குறிப்புகள் இந்த செல்பி ஸ்பாட்டில் விரைவில் இடம் பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
