கோவில்பட்டியில் ஆக்கி போட்டி: எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணி முதலிடம்

கோவில்பட்டியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி 2 நாட்கள் நடந்தது.
போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரி அணியும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் எஸ். எஸ். டி. எம். கல்லூரி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது. 2-வது இடத்தை அரசு கல்லூரி அணி பிடித்தது. 3 மற்றும் 4 வது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி அணியும் மோதின. இதில் கே.ஆர். கல்லூரி அணி 4 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.
இதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கே. ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் கே. ஆர். அருணாச்சலம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உடற்கல்வி துறை இயக்குனர் ஆறுமுகம் கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
