தடையை மீறி போராட்டம்; எடப்பாடி பழனிசாமி-எம்.எல்.ஏ.க்கள் கைது

சட்டசபையில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர்,
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்து செல்லப்பட்டனர். இது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
