சட்டசபையில் அமளி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்; சபாநாயகர் நடவடிக்கை

சென்னை தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.
2 வது நாளாக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர், இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ. பன்னீர் செல்வம் வந்தார். அவர் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். ‘
இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு பேசும் போது, “சட்ட சபையில் 2 அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படுவதால் அச்சத்தில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபடுகின்றனர். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாததால் திட்டமிட்டு கலகம் செய்கின்றனர். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பேச்சுக்கள் எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது” என்று அறிவித்தார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு , அவர்களிடம் உங்களுக்காக நேரம் தருகிறேன் கேள்வி நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள் எனக் கூறினார். ஆனால் அதை ஏற்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
முதலில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதியுங்கள் பிறகு நேரம் தருகிறேன் உங்கள் கேள்வியை எழுப்புங்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் அப்பாவு கேட்டு கொண்டார்.
கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கிறேன். சபையின் மாண்பை குலைக்க அனுமதிக்க மாட்டேன். உங்கள் நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் .உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். தீர்ப்பு வந்த உடன் அ.தி.மு.க. விவகாரம் குறித்த முடிவை சொல்கிறேன் என்று சபாநாயகர் கூறினார்.
அப்போது பேசிய தி.மு.க. அமைச்சர் துரைமுருகன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைக்கு பதில் சொல்ல பயந்து அ.தி.மு.க.வினர் கூச்சலில் ஈடுபடுவதாக கூறினார்.
ஆனாலும் தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.”கலகம் செய்யும் நோக்கில் வந்துள்ளீர்களா? ஒரு மணி நேரம் நடக்கும் கேள்வி நேரத்தில் இடையூறு செய்யக்கூடாது. எதிர்க்கட்சி தலைவர் விதியை மீறுகிறார். இருக்கைக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்தி எதிர்ப்பு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றபட உள்ளது என்பதை தெரிந்து கொண்டு யாருக்கோ பயந்து இவ்வாறு செயல்படுகிறீர்கள். ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதால் பழனிசாமி தரப்பு அச்சமடைந்து உள்ளீர்கள். மக்கள் பிரச்சினையை பேச மறுக்கிறீர்கள். நீங்கள் திட்டமிட்டே கலகம் செய்ய நினைத்து வந்துள்ளீர்கள். என்று குறிப்பிட்ட சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதை தொடர்ந்து சபை காவலர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றினர். சிலர் அவைக்காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
