பேரிடர் மேலாண்மை பயிற்சி: 86 சமூக ஆர்வலர்களுக்கு சான்றிதழ்

பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் மாவட்டம் தோறும் சமூக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் திட்டமான 12 நாட்கள் உறைவிட பயிற்சியாகிய ஆப்த மித்ரா (பேரிடர் நண்பன்) பயிற்சி நடத்திட மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்த மித்ரா பயிற்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. பயிற்சியின் இறுதி நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 86 சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் சான்று வழங்கப்பட்டது, சான்றிதழ்களை கோவில்பட்டி வட்டாட்சியர் வழங்கினார்.
இந்த பயிற்சி முகாமின்போது நிலநடுக்கம், நிலச்சரிவு, சுனாமி, வெள்ளம், சூறாவளி, மேகவேடிப்பு, அனல்காற்று, வறட்சி, குளிர் அலை, காட்ட்டுதீ, ரசாயன அவசர நிலை, கதிரியக்க அணுசக்தி அவசர நிலை, பாம்பு கடித்தல், விலங்குகள் கடித்தல், ரத்தபோக்கை கட்டுப்படுத்துதல் காயம் பராமரிப்பு, முதலுதவி மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்ட 25 பகுதிகள் அடங்கிய மாநில பேரிடர் மேலாண்மை முகமையில் இருந்து அனுப்பப்பட்ட பாடத்திட்டம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரி விரிவுரையாளர்கள், மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள். யோகா பயிற்றுனர்கள், நீச்சல் பயிற்றுனர்கள் மூலம் பங்கேற்பாளர்களுக்கு ஒத்திகை பயிற்சிகள், விரிவான விளக்க உரைகள், வீடியோ மற்றும் பவர் பாயிண்ட் மூலம் சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது,.
