காலியாக கிடக்கும் கடைகள்: வெறிச்சோடிய கோவில்பட்டி உழவர் சந்தை உயிர் பெறுமா?

விளைபொருட்களை, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது 1999-2000 ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.
பின்னர் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இத்திட்டத்தில் தோய்வு ஏற்பட்டபோதிலும், மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபோது மேலும் பல இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்சமயம் தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன
இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளே தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்யலாம். பொருட்களின் விலையை அரசு நியமித்த அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். மேலும் சரியான அளவில் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதையும் அவர்கள் கண்காணிப்பர்.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற உழவர் சந்தைகள் பல ஊர்களில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் கோவில்பட்டியில் உழவர் சந்தை விவசாயிகள் வரத்து இன்றி அவல நிலையில் காட்சி அளிக்கிறது. இந்த சந்தையில் மொத்தம் 76 கடைகள் உள்ளன.
ஆரம்பத்தில் நல்ல நிலையில் இருந்த உழவர் சந்தை சமீப காலமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறி விட்டது.
இந்த உழவர் சந்தை பஸ் நிலையத்தின் அருகில் உள்ள ஏ.கே.எஸ்.தியேட்டர் சாலையில் முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு கடைகள் அமைக்க விவசாயிகள் வருகை முற்றிலும் குறைந்து போனதுடன் பொதுமக்கள் வருகையும் சுமார் என்ற அளவில் ஆகி விட்டது.
பல ஊர்களில் காலை 6 மணிக்கு உழவர் சந்தை திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. ஆனால் கோவில்பட்டியில் 6 மணிக்கு போனால் ஒருசிலர் கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். 7 மணிக்கு பிறகு 3 காய்கறி கடைகள் திறக்கப்படுகின்றன, இங்கு விற்கப்படும் காய்கறிகள் நேரடியாக விவசாயிகள் கொண்டு வரப்படுபவை அல்ல. நகராட்சி தினசரி மார்க்கெட்டில் உள்ள மொத்த கடையில் வியாபாரிகள் வாங்கி வந்து உழவர் சந்தையில் விற்கிறார்கள்.
உழவர் சந்தையில் 3 காய்கறி கடைகள் தவிர ஒரு கீரை கடை, ஒரு தேங்காய் கடை மட்டுமே உழவர் சந்தையில் செயல்பட்டு வருகிறது. இருக்கும் கடைகளும் பிற்பகல் 2 மணிக்கு மூடப்பட்டு விடும். காய்கறிகள் போதிய அளவு வராததால் பொதுமக்களும் இங்கு வருவது குறைந்து விட்டது.

76 கடைகளில் 5 கடைகள் போக மீதமுள்ள கடைகள் அனைத்தும் காலியாக உள்ளன. அதே சமயம் உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் காலை 6 மணிக்கு காய்கறி விலையை நிர்ணயம் செய்து பலகையில் குறிப்பிட்டு வைத்து விட்டு சென்றுவிடுவார். காலையில் சென்றால் அந்த விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்..!. சந்தையில் இல்லாத பழங்களின் விலை விவரத்தையும் அறிந்து கொள்ளமுடியும்.
உழவர் சந்தையில் விழுதுகள் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் என்ற பெயரில் பல விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களை நேரடியாக கொள்முதல் செயுது மளிகை பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யும் பொருட்டு பல்பொருள் அங்காடி தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த பல்பொருள் அங்காடியில் பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கிடைக்கும்.
உழவர் சந்தையின் இன்னொரு வாசலின் நுழைவு பகுதியில் உள்ள இந்த அங்காடி காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு விடுகிறது என்பது ஆறுதலான விஷயம்.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் கோவில்பட்டி அருகே தோணுகால், கங்கன் குளம், இனாம் மணியாச்சி பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறி வகைகள், மற்றும் பழங்கள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு நடத்தினா்.
அப்போது வேளாண்மை துணை இயக்குனர் முருகப்பன் விவசாயிகளிடம் பேசும் போது, கோவில்பட்டி உழவர் சந்தையில் மொத்தம் 76 கடைகள் உள்ளன. இவற்றில் 36 கடைகள் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை நேரடியாக கடை வாடகை இன்றி, பொதுமக்களிடம் விற்பனை செய்து பயனடையலாம் என்று கூறினார்.
அப்படி இருந்தும் ஒரு விவசாயி கூட கோவில்பட்டி உழவர் சந்தைக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. எனவே அதிகாரிகள் மீண்டும் கள ஆய்வு நடத்தி ஒவ்வொரு கிராமமாக சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கான தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்திட வேண்டும்.
நல்ல முறையில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை இதுபோன்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, திரும்பவும் உயிர் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த நோக்கத்தில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டதோ அது வெற்றி பெற அதிகாரிகள் ,முழு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
–S.K.T.S.திருப்பதிராஜன்—
