• June 8, 2025

சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை; கல்குவாரி உரிமையாளர் – 2 பேர் கைது

 சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை; கல்குவாரி உரிமையாளர் – 2 பேர் கைது

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 39) என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரிக்கு அருகில் கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் (52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு செல்வக்குமார் நிலப்பிரச்சினை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் செல்வக்குமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஜெகநாதன் கனிம வளத்துறைக்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாரின் கல்குவாரியில் திடீர் ஆய்வு நடத்தி அதனை மூடி ‘சீல்’ வைத்து விட்டு சென்றனர். இந்தநிலையில் க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் மீது மினி லாரி ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெகநாதன் மனைவி ரேவதி கொடுத்த புகாரின்பேரில், க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜெகநாதன் மீது மோதிய மினி லாரி கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

மேலும் கல்குவாரியை மூட காரணமாக இருந்த ஜெகநாதனை தீர்த்துக்கட்ட செல்வக்குமார் முடிவு செய்துள்ளார். பின்னர் அவர் தனது லாரி டிரைவரை ஏவி ஜெகநாதனை லாரியை ஏற்றிக்கொலை செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார், லாரி டிரைவர் சக்திவேல் (24) மற்றும் டிரைவரின் கூட்டாளி ரஞ்சித் (44) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *