தமிழகத்தில் 4-ம் தேதி வரை கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையும்; நீலகிரி, கோவையில், நாளை முற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருச்சி, பெரம்பலுார், விருதுநகர், மதுரை, துாத்துக்குடி திருவாரூர் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்.
இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை, பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 23 செ.மீ., மழை கொட்டியுள்ளது.
அமராவதி அணை, ஆண்டிப்பட்டி, 10; வாடிப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்துார், 9; சாத்தான்குளம், 8; கொடநாடு, 7; ராஜபாளையம், மஞ்சளாறு, 6; செங்கல்பட்டு, 5; மாமல்லபுரம், 3; சென்னை எண்ணுார், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
கேரள, கர்நாடகா கடலோரம்; லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள்; குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.