போலி மதிப்பெண் சான்றிதழ்: அரசு பள்ளி ஆசிரியை பணிநீக்கம்
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜாத்தி(வயது 45).
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1994 -1996 ம் ஆண்டு ஆசிரியா் பயிற்சி படித்த இவா் ஆங்கில பாடத்தில் 37 மதிப்பெண் பெற்றிருந்தாராம். இதனை திருத்தி, 77 மதிப்பெண் பெற்றது போல போலி மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் கொடுத்து 2002ம் ஆண்டு ஆண்டு விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சோ்ந்தாராம்
தற்போது நாலாட்டின்புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இது குறித்து முறையான ஆய்வுக்கு பின் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த ராஜாத்தி தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவா் மீது கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் சின்னராசு அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.