கொடுத்த கடனை திருப்பி கேட்ட கட்டிட தொழிலாளி குத்திக்கொலை

கோவில்பட்டி புதுக்கிராமம் சிவாஜி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன் (வயது 30) என்பவர், வள்ளுவர் நகரைச் சேர்ந்த முத்துராஜ்(39) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்கள் கழித்து நேற்று, கடனாக கொடுத்த பணத்தை பாலமுருகன் திரும்பி கேட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் பணத்தை தருவவதாக முத்துராஜ் கூறியுள்ளார். இருந்த போதிலும் பணம் உடனடியாக வேண்டும் என்று கூறி மது போதையில் இருந்த பாலமுருகன், முத்துராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் கத்தியால் பாலமுருகனை குத்தி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்தில் பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று பாலமுருகன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முத்துராஜை தேடிவருகின்றனர்
