தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனைபற்றி புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் நம்பர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி, விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்தது கனடுபிடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து 4 கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், உத்தரவிட்டார்.
அதே போன்று முதல் முறையாக புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு வணிகர்கள் யாரேனும் மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடையை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறித்தோ அல்லது அதை விற்கும் கடைகள் குறித்தோ புகார் அளிக்க விரும்பினால், 94440 42322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணுக்கு அனுப்பலாம். புகாரைப் பெற்றுக்கொண்ட அடுத்த 48 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். புகார் அளிப்பவரது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் அறிவித்து உள்ளார்.
