ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமானவரி சோதனை முடிந்தது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் ஆர்த்தி ஸ்கேன் மையம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவில்பட்டியில் ஸ்கேன் மையம் தவிர மருத்துவமனையும் இயங்கி வருகிறது.
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் கடந்த 7-ந்தேதி காலை இந்த நிறுவனத்தின் தொடர்புடைய 25 இடங்களில் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து இன்று 4-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் நிறுவனத்தில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சோதனையில் கடந்த காலங்களில் இந்த நிறுவனம் கொள்முதல் செய்த கருவிகள் விவரம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிய கணக்கு பட்டியல், முதலீடுகள் குறித்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
