80 வயது தந்தையை அடித்துக்கொன்ற மகன்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள சோனாகன் விளையை சேர்ந்தவர் முத்து. (வயது 80). இவரது மனைவி ரோஜா (65). இவர்களது மகன் சுடலைமணி (48). சென்னையில் கூலி தொழில் செய்து வந்த சுடலைமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அதன்பிறகு அவர் சென்னைக்கு செல்லாமல் பெற்றோருடன் தங்கி இருந்தார். ‘
நேற்று முத்துவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடர்பாக தாயார் ரோஜாவுக்கும், மகன் சுடலைமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது
இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமணி, தாயார் ரோஜாவை கீழே கிடந்த கட்டையால் தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து மகனை தடுத்தார். அப்போது சுடலைமணி கட்டையால் தந்தையையும் சரமாரியாக தாக்கினார். இதில் முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே சுடலைமணி அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ரோஜாவை அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை குறித்து தகவலறிந்ததும் குரும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தப்பியோடிய சுடலைமணி கைது செய்யப்பட்டார்.
