திருச்செந்தூர் கடலில் பக்தர் தொலைத்த 10 பவுன் தங்கச் சங்கிலி; 8 மணிநேரத்தில் கிடைத்த அதிசயம்

திருப்பூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த், கடலில் புனித நீராடினார். கடலில் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை உணர்ந்தார். உடனடியாக அங்குமிங்கும் தேடிபார்த்தார். அனால் கண்களில் தென்படவில்லை.
தங்கச் சங்கிலி கிடைக்காமல் போனதையடுத்து, மன வருத்தத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்யச் சென்றார். கோவிலில் காசி விஸ்வநாதன் என்ற அர்ச்சகரிடம் தனது தங்கச் சங்கிலி கடலில் காணாமல் போனது பற்றி கூறினார்.
உங்க தங்கச்செயின் எங்கேயும் போகாது. முருகன் மேல பாரத்தைப் போட்டுட்டு மனமுருக வேண்டுங்க கிடைச்சிடும்” என்றார்.
இதனையடுத்து, கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் 40 பேர், கடலில் மூழ்கி காணாமல் போன 10 பவுன் தங்கச்சங்கிலியை தேடினர். தொடர்ந்து 8 மணி நேர தேடுதலுக்கு பிறகு பார்த்திபன் என்னும் சிப்பி அரிக்கும் தொழிலாளியின் கையில் தங்கச் சங்கிலி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி யானது ஒப்படைக்கப்பட்டது.
இதனால், மன மகிழ்ச்சி அடைந்த அவர், தங்கச்சங்கிலியை தேடிக் கொடுத்த கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களை, ஆரத்தழுவி கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்தார்.
தங்க சங்கிலி திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில், “ஓம் முருகா” என கூறியபடி கோவில் கோபுரம் நோக்கிக் கும்பிட்டார் ரஜினிகாந்த். பின்னர் தனது குடும்பத்தினருடன் கிளம்பி சென்றார்.
