ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ 2௦ லட்சம் இழந்த பெண் தற்கொலை

சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 32). இவரது மனைவி பவானி (29). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் இன்னொரு மகனும் உள்ளனர்,
பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார்.
இதில் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது. ஆனால் பவானி ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையானதால் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை. பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர்.
ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை. பவானிக்கு 2 தங்கைகள் உள்ளனர். இருவரிடமும் தலா ரூ.1½ லட்சம் பணத்தை கடனாக பவானி வாங்கியுள்ளார். இந்த ரூ.3 லட்சம் பணத்தையும் தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மொத்தமாக பணத்தை இழந்துள்ளார். வீட்டில் இருந்த தனது 20 பவுன் நகைகளை விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நகைகளை விற்ற பணம் லட்சக்கணக்கில் இருந்துள்ளது. இவை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரம்மி விளையாட்டில் செலுத்தி பணத்தை இழந்துள்ளார். இப்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் பவானி பணத்தை பறி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதணல் பவானி மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பவானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் குளித்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற பவானி, நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியில் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த கணவர் பாக்யராஜ் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு பவானி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ், பவானியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பவானி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பவானியின் கணவர் பாக்யராஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
