தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது; திருமாவளவன் சந்திப்பு பற்றி வைகை செல்வன் பேட்டி

திருச்சியில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று முன்தினம் சந்தித்தார்.

அப்போது, தான் எழுதிய “பேசு பேசு நல்லா பேசு” என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் வைகைச்செல்வன் வழங்கினார். அதன் பிறகு, இருவரும் சுமார் அரை மணி நேரம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
அதாவது, தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்தக் கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டுவருவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியில் மேலும் பலர் இணைவார்கள் என்று கூறிவருகிறது. இதற்கு மத்தியில், தொல்.திருமாவளவன் – வைகைச்செல்வன் சந்திப்பு நடந்துள்ளதால், பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைகைச்செல்வன், நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்தார்.

நிருபர்கள் அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு,”அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். பலர் வர உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. போகப்போக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.
