2 பேத்திகளை கொன்றுவிட்டு தாய்-மகள் தற்கொலை

2 பேத்திகளுடன் செல்லம்மாள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 45). இவரது மகள் பவித்ரா (28). இவரது கணவர் பிரபாகரன். இவர்களுக்கு லித்திக்ஸா (7), தீப்திஸா (5) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.

பவித்ரா, கணவர் பிரபாகரன் மற்றும் குழந்தைகளுடன் பள்ளபட்டி சவுந்தராபுரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் பவித்ராவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டார்.

இது குறித்து அரவக்குறிச்சி போலீசில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவர் பிரபாகரனுடன் கருத்து வேறுபாட்டால் தாயார் காளீஸ்வரியுடன், சின்ன குளிப்புட்டியில் கடந்த ஒரு மாதமாக இருந்தவர். நேற்று வீட்டில் இருந்த பவித்ரா திடீரென மாயமானார். 2 குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டு விட்டு வேறு ஒருவருடன் சென்றது தெரியவந்தது.

தனது மகள் வேறு ஒருவருடன் சென்றதை நினைத்து காளீஸ்வரி மனம் உடைந்தார். அக்கம் பக்கத்தினர் பேச்சு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் தற்கொலை முடிவுக்கு வந்தார்,
தனக்கு பிறகு பேத்திகள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணிய அவர் நள்ளிரவில் 2 பேத்திகளையும் ஒரே சேலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டு கொன்றனர். பின்னர் காளிஸ்வரியும், இவரது தாயார் செல்லம்மாள் (65) இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ‘

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று 4 பேர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
