இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடை பயணம்

வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.
வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும். அரிசி, கோதுமைக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை கோவில்பட்டி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நிதி வழங்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி ஒரே மதம் திட்டத்தை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநில அரசு பணிகளை தனியார்மயமாக்கக்கூடாது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை அனைத்து பாதுகாப்பு வசதிகளோடு செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கை களும் வலியுறுத்தப்பட்டன.

நடை பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.
மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய நடைபயணம், எட்டையபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மெயின்ரோடு வழியாக பயணியர் விடுதி முன்பு முடிவடைந்தது.
அங்கு மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச்சுணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜோதிபாசு, முருகன், அந்தோணி செல்வம், கதிர்வேல்,தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், ஜானகி,வேலுச்சாமி, முத்துலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
