கர்நாடகத்தில் “தக் லைப்” படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது ; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படம் கடந்த 5-ந் தேதி கர்நாடகம் தவிர உலகம் முழுவதும் திரைக்கு வந்தது.
அதற்கு முன்பு கடந்த மாதம்(மே) 24-ந்தேதி சென்னையில் நடைபெற்ற அந்த பட விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, தமிழில் இருந்துதான் உங்கள் மொழி பிறந்தது, அதனால் நாம் வேறுபட்டவர்கள் இல்லை என்று கூறினார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கன்னட சினிமா வர்த்தக சபை, கன்னடம் குறித்த தனது கருத்துக்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது ‘தக் லைப்’ படத்தை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது.
இதற்கு எதிராக அதாவது கர்நாடகத்தில் ‘தக் லைப்’ படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசனை கடுமையாக சாடினார். எந்த அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது?, அதற்கு ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். மன்னிப்பு கேட்கும்படி நீதிபதி அறிவுரை கூறினார். ஆனால் கமல்ஹாசன், தான் தவறு செய்யாத போது எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு கடந்த 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, கன்னட சாகித்திய பரிஷத் சார்பில் வக்கீல் பசவராஜ் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்குமாறு கோரினார். மேலும் இதுகுறித்து ஆட்சேபனை தாக்கல் செய்ய ஒரு வாரம் காலஅவகாசம் வழங்குமாறு கோரினார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி நாகபிரசன்னா, நடிகர் கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு வக்கீல், இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று பதிலளித்தார். அதன் பிறகு நீதிபதி நாகபிரசன்னா இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ஏற்கனவே ‘தக் லைப்’ படத்திற்கு கர்நாடகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை 20-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறினார்.

இதற்கிடையே மகேஸ்ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்,. கர்நாடகத்தில் ‘தக் லைப்’ படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்துள்ளதாகவும், இது நீதித்துறையின் அதிகாரத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் இந்த தடையை நீக்கி படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோரின் முன்னிலையில் கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசு, கன்னட சினிமா வர்த்தக சபைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கின் அவசரம் கருதி நாங்கள் அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில், கர்நாடகத்தில் ‘தக் லைப்’ படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ” தக் லைப் படத்திற்கு தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். .கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை ஏற்க முடியாது.
கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுவது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வேலை இல்லை. தணிக்கைச் சான்றிதழ் பெற்ற எந்தப் படத்தையும் வெளியிடுவதை தடுக்க முடியாது.
‘தக் லைப்’ திரைப்படம் தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும். கர்நாடகத்தில் ‘தக் லைப்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
