14 மாவட்டங்களில் 23-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது.
பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 23-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

