தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து நடத்திய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக 30 பயனாளிகளுக்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 30 பயனாளிகளுக்கு 30 லட்சத்து 54ஆயிரம் ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை கனிமொழி எம்பி வழங்கினார்.
மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பில் QSCREEN MACHINE OAE – ABR கருவி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக விபத்து மரணத் தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ. 1 லட்சத்தை கனிமொழி எம்.பி வழங்கினார்.
