கோவில்பட்டி, சுற்றுப்புற ஊர்களில் மழை

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி கோவை, நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
கோவில்பட்டியில் நேற்று காலை, மதியம் என கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மழை நின்று சில நிமிடங்களில் தண்ணீர் வடிந்து விட்டது.
இளையரசநேந்தல் சாலையில் சுரங்க பாலத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் தேங்கி இருந்தது. இருப்பினும் வாகன போக்குவரத்து வழக்கம் போல் நடந்தது.
கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற ஊர்களிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது.
தூத்துக்குடி தாமோதரன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவருக்கு அந்தப் பகுதியில் 60 ஆண்டு பழமையான வீடு ஒன்று உள்ளது. மழை பெய்ததை தொடர்ந்து வீடு மோசமான நிலையில் இருந்ததால் சேதமடைந்த வீட்டில் தங்காமல் அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக சுமார் மூன்று மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீட்டிற்குள் விழுந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக ராஜாவின் குடும்பத்தினர் வீட்டில் தங்காததால் தப்பினர்.
