முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் உதவி; க.இளம்பகவத் தகவல்

முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் தொடங்கிட ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் துவங்கிட வேண்டி ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் துவங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 03 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்திட தகுதியானவர்களின் வயது வரம்பு விபரம் பின்வருமாறு:- முன்னாள் படைவீரர்கள் (வயது வரம்பு இல்லை), முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள்/படைப்பணியில் உயிர்நீத்த படைவீரரின் கைம்பெண்கள் (21 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்),
முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியில் உயிர்நீத்த படைவீரரின் திருமண ஆகாத மகள்கள் மற்றும் மகன்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்கள், முன்னாள் படைவீரர்களின் திருமணம் ஆகாத மகன்களுக்கு ( 21 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்), விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பண்ணை தொழில்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே விருப்பமும். தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் /இராணுவ பணியின் போது உயிரிழந்த படைவீரர்களை சார்ந்தோர்கள் தங்கள் விருப்பத்தினை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0461-2902025 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
