• June 7, 2025

சபாநாயகர் அப்பாவுவை நீக்கக்கோரி அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

 சபாநாயகர் அப்பாவுவை நீக்கக்கோரி அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்திருந்தார்.

தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது நேற்று (திங்கட்கிழமை) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி  நேற்று காலை சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான ‘ஜீரோ அவர்’ எடுக்கப்பட்டது. அப்போது உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோரினார்.  தீர்மானம் உடனே எடுத்து கொள்ளப்பட்டது.  இதனால், சபாநாயகர் அப்பாவு, தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.

பின்னர் துணை சபாநாயகர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்தினார்.  நம்பிக்கையில்லா  தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த தீர்மானம் மீது நடந்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டது.

தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் துணை சபாநாயகர் கணக்கிட்டு கொண்டார்.  இதில், இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது என்பது விதியாகும்.

அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்தினார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்க செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணி கணித்து, அதை துணை சபாநாயகரிடம், சட்டசபை செயலாளர் அளித்தார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டது.

டிவிஷன் முறையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் விழுந்தன.

இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து அவையை அவர் வழக்கம்போல் வழிநடத்தினார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *