முக்கூடல் அருகே ஆற்றில் மூழ்கிய இன்னொரு தூத்துக்குடி சிறுமியின் உடல் மீட்பு

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாக அர்ச்சனன். மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வேளார்குளத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது அவர்களில் 6 பேர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்தனர். அப்போது அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று, தண்ணீரில் தத்தளித்த 4 பேரை மீட்டனர். ஆற்றில் மூழ்கிய நாக அர்ச்சுனன் மகள் வைஷ்ணவி (13), அய்யப்பன் மகள் மாரி அனுஷ்யா (16) ஆகிய 2 பேரை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி, அம்பை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சிறுமி வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து மாரி அனுஷ்யாவை தேடும் பணி இரவு வரையிலும் நடைபெற்றது. ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை.
மறுநாள் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது சிறுமி மாரி அனுஷ்யாவின் உடல் மீட்கப்பட்டது. இறந்த சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
