மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மதுரை அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதை தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்ச்செல்வன், மரு. ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மற்றும் கலெக்டர் சங்கீதா ஆகியோரும் உடனிருந்தனர்.
காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் காலை 7.42 மணி அளவில் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, இதன்பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன, 1,100 காளைகள், 900 வீரர்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்ட்டை காண ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்காக ஆம்புலனஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
