ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18-19 வயது வாக்காளர்களுக்கும், முகவரி மாற்றம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும், நகல் அடையாள அட்டை கோரியவர்களுக்கும் வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை விரைவு அஞ்சல் மூலம் இது வரை 16799 அனுப்பபட்டுள்ளது. மீதமுள்ள 33726 நபர்களுக்கு விரைவில் விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும்.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயது பூர்த்தியானவர்கள் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் குறைவாகவே உள்ளதால் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தியான அனைத்து நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலைநாட்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் அலுவலரிடமிருந்து படிவங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 1.8.2022 முதல் நடைபெற்றுவருகிறது. இப்பணியில் நமது மாவட்டத்தில் 70.52 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
மேலும் நகரப்பகுதிகளில் இப்பணி மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் இணையதளத்தில் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், கைபேசியில் Voter Helpline APP (VHA) என்ற செயலியினை பதிவிறக்கம் செய்தும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்திடவும் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திடவும் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொது மக்கள் தகவல்களை பெறவும் மற்றும் இடர்பாடுகள் இருப்பின் தெரிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் 0461-1950 ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதி வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ஆட்சியர் இளம்பகவத் கூறினார்.
