பட்டாசு வெடித்த 4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை: அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவல்

தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 31-ம் தேதி நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தரும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்தபின், 104 பேர் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு எங்களிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 4 பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
எனவே குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் முன்னிலையில் அதிக கவனத்துடன் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடி பார்வை இழப்பை காக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
