தீபாவளி அரசு சிறப்பு பேருந்துகளில் ஒரே நாளில் அதிகமானோர் முன்பதிவு செய்து பயணம்

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பணியாற்றி வந்தவர்கள், மாணவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். நேற்றுடன் 4 நாட்கள் விடுமுறை முடிவடைந்த நிலையில், பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு மற்றும் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் பல லட்சக்கணக்கானோர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று மட்டும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்க்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
“தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் நேற்றைய தினம் நவம்பர் 3-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, பிற இடங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மேலும், 03.11.2024 அன்று மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்க்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
