தேர்தலில் வியூகம் வகுக்க ஆலோசனை கட்டணம் ரூ.100 கோடி: பிரசாந்த் கிஷோர்

ஜன் சுராஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஒரு தேர்தலுக்கு ஆலோசனை அளிப்பதன் மூலம் ரூ.100 கோடிக்கும் மேலாக நிதிபெற்று வருவதாக கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து, அதற்கேற்ப பிரச்சாரம் முதல் அனைத்தையும் வடிவமைத்து கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் உலகெங்கும் உள்ளன. அமெரிக்க தேர்தலிலும் இவை பெரிய பங்கு வகிக்கும். அது இந்திய தேர்தல் களத்திலும் கடந்த சில ஆண்டுகளாக பார்க்க முடிகிறது. அதில், அரசியல் வியூக வகுப்பாளர்களில் இந்தியாவில் அதிகம் அறியப்பட்டவர் எனில் பிரசாந்த் கிஷார் தான்.
2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றபோது பிரசாந்த் கிஷோரின் அப்போதைய நிறுவனம் தான் வியூகம் வகுத்து கொடுத்தது. அப்போதுதான் பிரசாந்த் கிஷார் நன்கு வெளிச்சத்திற்கு வந்தார் எனலாம். அப்போது இருந்து இந்திய அரசியல் களத்தில் பிரசாந்த் கிஷோர் முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார்.
இந்நிலையில், பிகாரில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது., ஜன் சுராஜ் கட்சி (மக்கள் நல்லாட்சி) ஒருங்கிணைப்பாளரான பிரசாந்த் கிஷோர் தலைமையில் சமீபத்தில் பெலகஞ்சில் பிரச்சாரம் நடந்தது.
இந்த பிரசாரத்தின்போது, பேசிய அவர், `பிரச்சாரத்தை நடத்துவதற்குகூட என்னிடம் போதுமான பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா., நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா., என்னுடைய வசூலிக்கும் கட்டணம் குறித்து பிகாரில் ஒருவருக்கு கூட தெரியாது.
நான் ஒரு தேர்தலுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம், குறைந்தது ரூ.100 கோடிக்கும் மேலாக கட்டணமாக வசூலிப்பேன். வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் 10 அரசுகள் எனது ஆலோசனைகளின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன.
மேலும், ஏதேனும் ஒரு தேர்தலுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம், நான் மேலும் 2 ஆண்டுகளுக்கான பிரச்சாரத்திற்கு நிதியினை அளிக்க முடியும். என்று தெரிவித்தார். பிகாரில் நவம்பர் 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 4 தொகுதிகளில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிரசாந்த் கிஷோர்., ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ஒய்எஸ்ஆர்சிபி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக முதலான கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
