நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரைசதம்: புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது. சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் களத்தில் இருந்தனர். 2-ம் நாள் ஆட்டம் துவங்கியவுடன் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆட துவங்கினார். அவர் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக அரை சதம் ஆகும்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வாலின் (41 பந்துகள்) மாபெரும் சாதனையை முறியடித்து பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கிறார்.
