”தங்கலான்” படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் ‘தங்கலான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களுக்கு இடையே மிக பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து, விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தணிக்கை சான்று பெற்று திரையரங்குகளில் வெளியான படத்தை ஓடிடியில் வெளியிட எப்படி தடை விதிக்க முடியும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ‘தங்கலான்’ விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
