திமுகவின் கடைசி தொண்டன் உள்ளவரை தமிழ்த்தாய் வாழ்த்தை தொட முடியாது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியோடே இந்தி மாத நிறைவு கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலை பாடிய சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியது.
பல அரசியல் தலைவர்கள் இந்த செயலுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது இவ்விவகாராம் தொடர்பாக பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த திருமண விழா மேடையில் பேசிய அவர், “நான் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நடத்தி வைக்கும் முதல் திருமணம் இது. திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை.. மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையோடு வாழ வேண்டும். என்று மணமக்களை வாழ்த்தி பேசிய உதயநிதி.,அதனைத்தொடர்ந்து நேரடியாக இந்தியை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய அவர் ” தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர். திமுக-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழ்த்தாய் வாழ்த்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக இந்தியை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
