சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறார்: ஸ்டெயின்

ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டேல் ஸ்டெயினின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டெயின் விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் மிக சிறந்த வேக பந்துவீச்சாளர்களில் ஒருவர் டேல் ஸ்டெயின். இவர் ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர போவதில்லை என்பதை தனது எக்ஸ் வலைதள பதிவின் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது எக்ஸ் வலைதளபதிவில் கூறியிருப்பதாவது: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சில ஆண்டுகள் செயல்பட வாய்ப்பளித்த அணி நிர்வாகத்துக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். துரதிருஷ்டவசமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக என்னால் தொடர முடியாது. இருப்பினும், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்படுவேன். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல வைக்க முயற்சி செய்வோம். என பதிவிட்டுள்ளார்.
