போராட்டம் வாபஸ்: மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள், கடந்த மாதம் 9-ம் தேதி முதல் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறையிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. அதன் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சுமூகமாய் தீர்க்க தாமோ அன்பரசன், சிவி கணேசன், டிஆர்பி ராஜா ஆகிய மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். இந்த குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைய, ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.
கடந்த 10ஆம்தேதி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் மற்றும் சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்கனவே முதலமைச்சர் அமைத்த அமைச்சர்கள் குழு., சாம்சங் ஊழியர்கள், சாம்சங் நிர்வாகிகள், சிஐடியு தலைவர்கள் ஆகியோரை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால், சுமார் 39 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாம்சங் ஊழியர்கள், மீண்டும் இன்று பணிக்கு திரும்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சாம்சங் வாகனத்தில் வராமல் அனைவரும் சொந்த வாகனத்தில் சென்றனர்.
