கனமழை எச்சரிக்கை: சென்னையில் கூடுதலாக இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள்

தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று. நாளை, நாளை மறுநாள்களில் அதீத கனமழைபெய்யும் என்பதால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை எதிரொலி காரணமாக மூன்று நாள்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
அதன்படி இன்று( 15.10.2024), நாளை (16.10.2024) மற்றும் நாளை மறுநாள் (17.10.2024) ஆகிய மூன்று நாட்களும் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும். காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 இரவு மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், பச்சை வழித்தடத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயிலும், நீல வழிதடத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
மேலும் மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கூடுதல் சேவையை மெட்ரோ வழங்குவதாகவும், எவ்வளவு மழை பொழிந்தாலும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படாது எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ள தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழை நீர் தேங்க வாய்ப்புள்ள மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
