லைட்டர்கள் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை;கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம், குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இருப்பின்னும் உற்பத்தியில் 80 சதவிகித தீப்பெட்டிகள், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ,90 சதவீதம் பெண்களே பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். ஒரு சீன லைட்டரின் விற்பனை என்பது 20 தீப்பெட்டிகளின் விற்பனையை பாதித்தது.
எனவே சீன லைட்டர்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு அரசு தடை விதித்தது, இருப்பினும், சீனாவிலிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் திருட்டுத்தனமாக லைட்டர்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தீப்பெட்டி விற்பனை குறைந்து தேக்கம் அடைந்து வருகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். திருட்டுத்தனமாக சீன லைட்டர்கள் இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும், உதிரி பொருட்கள் வருகையை நிறுத்தட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு நேற்று முன்தினம் சீன லைட்டர்கள் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. எரிவாயு எரிபொருள், நிரப்ப முடியாத அல்லது நிரப்பக்கூடிய லைட்டர்களின் (சிகரெட் லைட்டர்கள்) உதிரி பாகங்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேது ரத்தினம் கூறியதாவது:-
`மோடி அரசு பதவியேற்றதும் சிறுதொழில்கள் பட்டியலில் இருந்து தீப்பெட்டித் தொழிலை நீக்கியது எங்களுக்கு முதல் பாதிப்பு. தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி-யை 5 சதவீதமாக் குறைக்க வேண்டும் என்று 5 வருடமாக போராடியதன பயனாக 12 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களான அட்டை, பேப்பர், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்தது.. இதனால் ஒரு ருபாய்க்கு விற்பனைசெய்த ஒரு தீப்பெட்டியின் விலையை 14 வருதத்துக்கு பிறகு, கடந்த 2021 டிசம்பர் 1-ம் தேதியில இருந்து 2 ரூபாயாக உயர்த்தினோம். அதற்குப்பிறகும் மூலப்பொருளின் விலை உயர்வு அதிகரித்தது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 8 தடவையாக மொத்தம், 40 சதவீதம் வரைக்கும் விலை அதிகரித்து உள்ளது.
.இதனால, 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டலின் விலையை ரூ.300 இல் இருந்து ரூ.350-ஆக உயர்த்தினோம். ஆனால் வியாபாரிகள் இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஆர்டர்களும் குறைந்து விட்டது. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான எல்லா மூலப்பொருட்களையும் தமிழக அரசின் ’சிட்கோ’ மூலம் மானிய விலையில் தர வேண்டும் என்று பல வருடமாக கோரிக்கை வைத்து வருகிறோம்,.
.தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தியாகிறது.. தற்போது 3 மாதமாக லைட்டர்களால் ரூ,100 கோடி வரை விற்பனை மந்தம் ஆகி விட்டது. இந்த பாதிப்பால் சீன லைட்டர்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தோம்.
இந்த நிலையிலதான் மத்திய அரசு, சீன லைட்டர்களின் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்து இருக்கிறது.. இதை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்கிறோம். இந்த தடை உத்தரவால் இனிமேல் தீப்பெட்டி உற்பத்தி அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு சேதுரத்தினம் கூறினார்.
