வங்காளதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2-டெஸ்ட் மற்றும் 3-டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்குயிடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளுக்குயிடையிலான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம்சன் 10 ரன்னிலும், அபிஷேக் சர்மா 15 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் நிதிஷ் ரெட்டி 74 ரன்னிலும், ரிங்கு சிங் 53 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய பாண்ட்யா 32 ரன்னிலும், பராக் 15 ரன்னிலும், வருண் சக்கரவர்த்தி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 74 ரன்களும், ரிங்கு சிங் 53 ரன்களும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக பர்வேஸ் ஹுசைன் 16 ரன்களிலும், லிட்டன் தாஸ் 14 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.கேப்டன் நஜ்முல் ஹுசைன் 11 ரன்களிலும் அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற நிதானமாக ஆடிய மஹ்முதுல்லா மட்டும் 41 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
