அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டத்துக்கு தடை: கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கண்டனம்

க.தமிழரசன், -இ.பெஞ்சமின் பிராங்கிளின்
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் இ.பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் சேர்ந்து விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு அரசு அலுவலகத்தின் முன்பும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. மேலும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மறுப்பதாகும் , மேலும் ஜனநாயக விரோதமானதாகும். விடுதலை போராட்ட வீரர்கள் போராட்டம் நடத்தியதால் தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது.
மொழி உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியதால் தான் தமிழ்நாடு என்ற மாநிலம் உருவானது.
இலங்கையில் தமிழ் மக்கள் பாதிப்பிற்கு உள்ளான போது தமிழ்நாட்டில் பதவி வகித்த அனைத்து முதல்வர்களும் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடினார்கள். அவசர நிலை காலத்தில் போராட்டம் நடத்தியதால் தான் இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி நகரத்தில் மக்களின் வாழ்க்கையையும், சுற்றுப்புறச் சூழலையையும் நாசமாக்கிக் கொணடிறிந்த ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது மக்களின் போராட்டம் தான்.
எனவே அரசியல் இயக்கங்கள், தலைவர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
மேலும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் லஞ்சம், லாவன்யங்கள் குறித்தான நிகழ்வுகளை எதிர்த்து அந்தந்த அரசு அலுவலகங்களின் முன்பு தான் போராட வேண்டியது உள்ளது
அரசிற்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலம் தான் பொதுமக்களின் போராட்டங்கள் தான்.
எனவே எளிய மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும், மிரட்டும் வகையிலும் அறிவிப்பு வெளியிட்டள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் காவல்துறை உயர் அதிகாரிகளும் போராட்டங்கள் குறித்த புரிதல்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
