தூத்துக்குடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை; 3 பேருக்கு வலைவீச்சு

தூத்துக்குடி அருகே மறவன்மடம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் முருகன் (வயது 23). இவர் புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரில் குடியிருந்து வந்தார். இன்று காலை 7 மணி அளவில் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர், அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத முருகன் தப்பிக்க வழியின்றி அவர்களிடம் மாட்டிக்கொண்டார். அரிவாள் வெட்டுக்காயங்களால் கீழே சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதை தொடர்ந்து கொலை கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட முருகனுக்கும் தூத்துக்குடி ராஜகோபால் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மரிய தங்கம் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில்ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் முருகனை மரியதங்கம் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மரிய தங்கம் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
