வைப்பார் தர்ஹாவில் சந்தனகூடு திருவிழா


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் என்ற கிராமத்தில், பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த “மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா” தர்ஹா மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
அனைத்து மத மக்களும் மதபேதமின்றி இங்கு வந்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய பெருமை கொண்டுள்ள இந்த வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மதத்தினராலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.
பள்ளிவாசல் வீட்டிலிருந்து முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தனக்கூடு புறப்பட்டு மிகப்பிரமாண்டமாக வானவேடிக்கையுடன், தப்புதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சுற்றிவந்து, அதிகாலை 4.30 மணிக்கு தர்ஹாவை வந்தடைந்தது.
பின்னர் ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அந்த விஷேசமான சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சந்தனம் அங்குள்ள சிவன் கோவிலில் அரைத்து எடுத்து வந்த பயன்படுத்துப்பட்டது குறிப்பிடதக்கது.
மேலும் இங்கு நடைபெறும் விளக்கு பூஜையில் மதப்பாகுபாடின்றி, இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என பலதரப்பட்ட மதத்தினரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு மத ஒற்றுமையைப் போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.
மேலும் இந்த விளக்குகள் அணையாமல் விடிய விடிய எண்ணெய் ஊற்றி எரியூட்டப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்திலேயே இந்த ஒரே ஒரு தர்ஹாவில் மட்டும் தான், இந்துக் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது என்பது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.
